Archive for நவம்பர், 2008

மாவீரர் நாள் – தலைவர் உரை காணொளி

மாவீரர் நாள் – தலைவர் உரை காணொளி – பகுதி 1

மாவீரர் நாள் – தலைவர் உரை காணொளி – பகுதி 2

மாவீரர் நாள் – தலைவர் உரை காணொளி – பகுதி 3

நவம்பர் 29, 2008 at 5:10 பிப 1 மறுமொழி

மாவீரர் நாள் : தலைவர் உரை

நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்

நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

நவம்பர் 27, 2008 at 3:10 பிப 1 மறுமொழி

காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார் -சீமான்

seemaan-kumudam

ரே நாள் இரவில்  குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. “நாங்கள் பேசியதில் தவறில்லை” என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கியுள்ள சீமானைச் சந்தித்தோம். கேள்விகளை முன்வைத்தபோது அவரின் பதில்கள் அக்னியாக வந்து விழுந்தன.

சென்னையில் சினிமா நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

“இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

`அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும்’ என கமல் கூறியது சரியான வார்த்தை. `சர்வதேச ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்’ என ரஜினி கூறியதும் சரியானதே. ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணரவேண்டும் என்பதே  என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது.”

ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால், இலங்கைப் பிரச்னையில் இந்திய நிலைப்பாடு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

“ஒருங்கிணைந்த இலங்கை மீது இந்தியாவுக்கு ஏன் அவ்வளவு அக்கறை எனப் புரியவில்லை. இலங்கையில் தமிழீழம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை முடிவு செய்துவிட்டு, அதனடிப்படையில் இந்தியா செயல்படுகிறது. இலங்கையில் இருதரப்பினருக்கிடையே பிரச்னை. அப்படியிருக்கையில் இரு தரப்பினரிடையேயும் பேசுவதுதானே நியாயம். ராஜபக்ஷேவையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் ஏன் தமிழீழத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களிடமாவது பேசலாமே.

இலங்கையைப் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி கொடுப்பது வழக்கம் தான் என்கிறார்கள். அப்படியானால், பாகிஸ்தானைச் சேர்ந்தவனுக்கும் சீனாவைச் சேர்ந்தவனுக்கும் பயிற்சி கொடுப்பீர்களா? அவர்களுக்குக் கொடுப்பதும் சிங்களனுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான். இலங்கைப் பிரச்னைக்கு ராணுவத்தின் மூலம் தீர்வு காணமுடியாது என்று சொல்கிறீர்கள். அப்படியிருக்கையில் ஏன் ராணுவ உதவி செய்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த ஆயுதத்தை அவன் தமிழனை நோக்கித்தானே பிரயோகப்படுத்துகிறான். செஞ்சோலையில் குழந்தைகள் கொல்லப்பட்டபோது சிறு வருத்தம் கூட இந்தியா தெரிவிக்கவில்லையே. மனிதநேயம் இங்கு மரித்துப் போயிற்றா..?

சொந்த நாட்டில் ஐந்து லட்சம் தமிழ் மக்களை அகதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறது இலங்கை. தமிழர்கள் வாழும் பகுதிக்கு பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. அடிப்படைத் தேவைகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதை ஏதும் கண்டிக்காத ஒரு நாடு, எப்படி மனிதநேயம் மிக்க நாடாக இருக்கமுடியும்? பொற்கோயிலில் நடந்த ராணுவ நடவடிக்கைகளை சீக்கியர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்கிறார் மன்மோகன் சிங். அதேபோலத் தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை தமிழர்களுக்குச் செய்த அட்டூழியத்தை ஒருபோதும் தமிழன் மறக்கமாட்டான். மனித நேயத்தைப் புதைத்துவிட்டு  தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்கிறது இந்தியா. இந்திய தலைமை, தமிழினத்துக்கு எதிராக உள்ளது. இங்கு நடப்பது இந்திய அரசல்ல.”

தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நீங்கள் தொடர்ந்து பேசி வருகிறீர்களே?

“காந்தி சுடப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்ட இயக்கம். அப்போது யாரும் பேசவில்லையா? தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்றால், அது சர்வாதிகார நாடாகத்தான் இருக்கமுடியும். இந்தியா சர்வாதிகார நாடு எனச் சொல்வீர்களேயானால் நான் ஏதும் பேசாமல் இருக்கத் தயார். ஆனால், இது ஜனநாயக நாடு. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேச ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என நான் நம்புகிறேன்.”

விடுதலைப்புலிகள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறார்களே?

“அவர்கள் போரிடவில்லை. சர்வதேச ராணுவ உதவியுடன் தங்களைத் தாக்கும் இலங்கையிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.. `ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால், நாங்கள் ஆயுதம் தூக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது’ என்பார் பிரபாகரன். அதுதான் உண்மை. தமிழர் பகுதியில் இலங்கை ராணுவம் ஆறாயிரம் முறை குண்டு வீசியிருக்கிறது. ஒவ்வொரு குண்டும் ஆயிரம் கிலோ எடை கொண்டது. சர்வதேச போர் முறைப்படி பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சிறார்கள்,  கர்ப்பிணிப் பெண்கள், நூலகம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உள்ளது. இதில் எதையும் இலங்கை ராணுவம் கடைப்பிடிக்கவில்லை. இதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

ஆயுதத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி தமிழ்ப் பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களவன். அதைத் தடுக்க வேண்டுமானால், அவன் பயன்படுத்திய அந்த ஆயுதத்தை எடுப்பதைத் தவிர வேறு எது தீர்வாக இருக்கமுடியும்? அங்கு விடுதலைப்புலிகள் நடத்துவது வீரஞ்செறிந்த அறப்போர். மரணத்தை முன்னிறுத்தி விடுதலைப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள், மனிதநேயம் கொண்டவர்கள். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் நடப்பவர்கள். ஆனையிறவு போரில் நாற்பதாயிரம் சிங்களப் படைவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்தார்கள். இந்தியா  போர் நிறுத்தம் செய்யக் கேட்டுக்கொண்டதால், அவர்கள் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை என்றைக்காவது இப்படி மனிதநேயத்தை வெளிப்படுத்தியதுண்டா?”

தமிழீழம் கேட்பதுதானே பிரச்னை?

“தமிழீழம் கேட்பதை யார் தீர்மானிப்பது? அங்கு வாழும் தமிழ் மக்கள்தானே முடிவு செய்யவேண்டும். அவர்களிடம் யாராவது கருத்துக் கணிப்பு நடத்தினார்களா? இல்லையே! வாடகைக்கு வந்தவன் வீட்டைக் காலி செய்யமாட்டேன் என்றால் எப்படி பொறுத்துப் போகமுடியும்?”

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாகத்தானே கருதப்பட்டு வருகிறது?

“தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதைத் தீர்மானிப்பதெல்லாம் மக்களும் காலமும்தான். நான்கைந்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அறையில் உட்கார்ந்து கொண்டு அதைத் தீர்மானிக்கமுடியாது. நெல்சன் மண்டேலாவை எந்த நாடாளுமன்றம் தீவிரவாதி என்றதோ, அதே நாடாளுமன்ற வளாகத்தில் அவர் சிலை திறக்கப்பட்டது. எனவே காலம்தான் தீவிரவாதமா, பயங்கரவாதமா என்பதைத் தீர்மானிக்கும். இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்களை, உள்நாட்டு போராட்டக் குழுவான விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது. இதற்கு பல நாடுகளும் ஆயுதங்களைத் தருகிறது. கொத்துக்கொத்தமாக ஓர் இனம் மடிய அது உதவுகிறது. இது ஒரு சர்வதேச பயங்கரவாதம். இதைக் கண்டிக்கத் துப்பில்லாத எந்த நாட்டினம் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகள் எனச் சொல்ல அருகதையற்றவர்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்கான இயக்கம். தமிழீழ மண்ணில் நடப்பது காந்திய வழியிலான போர்தான். `இனப் படுகொலை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அகிம்சையுடன் இருக்கமுடியாது. அதை அடக்க எந்த விதமான ஆயுதத்தையும் எடுக்கத் தயார்..’ என காந்தி சொல்வார்.  காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார். `உலகின் எந்த மூலையில் ஒரு நாடு விடுதலைக்காகப் போராடுகிறது என்றாலும், அதை இந்தியா ஆதரிக்கும்’ என பிரகடனப்படுத்தினார் நேரு. ஆனால் இந்தியா ஏன் தமிழீழ விடுதலையை ஏற்க மறுக்கிறது எனத் தெரியவில்லை.”

உண்ணாவிரதத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி. சேகர் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது எனக் கூறியிருக்கிறாரே?

“எஸ்.வி. சேகரை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களை எண்ணித்தான் வேதனைப்பட வேண்டியிருக்கிறது. ஈழத்தின் உள்நாட்டுப் பிரச்னையில் ராஜீவ்காந்தி தலையிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நானூறு தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்களே… அது எந்த நாட்டுப் பிரச்னை என்கிறார் சேகர். குறைந்தபட்சம் கருத்துச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டபோது சேகர் கேட்டிருக்கலாமே. அவருக்குப் புரிதல் அவ்வளவு தான்..”

சிறையில் இருந்த அனுபவம்..

“விருப்பத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்த பணி அது. சிக்கல் வரும் எனத் தெரியும். அதற்காகச் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் இருந்தால் என்னை என் தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது…” என ஆவேசத்தோடு முடித்துக்கொண்டார் சீமான்.

நன்றி : குமுதம் 09.11.08

நவம்பர் 7, 2008 at 11:37 முப 12 பின்னூட்டங்கள்

நான் இப்போதும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறேன் -திருமா

thiruma

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தை அவர் தீவிரமாக ஆதரித்துப் பேசுவதற்கு எதிராக, காவல்துறையிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடும் அடுத்தகட்ட முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள் என்ற பேச்சும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் நாம் திருமாவளவனைச் சந்தித்தோம்…

விடுதலைப் புலிகளை நீங்கள் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறீர்கள். அதனால் உங்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பற்றி?

“கைது, சிறை ஆகியவற்றிற்கு அஞ்சி நியாயத்தைப் பேசத் தவறினால் மனிதனாக இருப்பதில் பொருள் இல்லை. கொடுமையைக் கண்டு குமுறாமல், அநீதிக்கு எதிராக ஆத்திரப்படாமல், சட்டத்திற்காகவும், சிறைக்காகவும் பயந்து நடுங்கி உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லத் தயங்கும் கோழைத்தனத்தை நான் கொண்டிருக்க முடியாது. அப்படி ஒரு வாழ்க்கையே தேவையில்லை என நினைப்பவன் நான். இன்று நேற்றல்ல. கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாகவே விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் நான் ஆதரித்தே வருகிறேன். அந்த நிலைப்பாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் நான் மாற்றிக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் புலிகளோடு ஆயுதம் ஏந்திப் போராட முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்கிருக்கிறதே ஒழிய, ஆதரித்தால் கைது செய்வார்களே என்ற அச்சம் சிறிதும் இல்லை.

இங்கே விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சில தலைவர்கள் வரலாற்றை அறிந்துகொள்ள, தெரிந்து கொள்ளத் தவறியதால், அல்லது தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதால் அப்படி எதிர்க்கிறார்கள் என்பதே என் கருத்து. வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உள்ள மலையகத்தில் தேயிலைத் தோட்ட வேலைக்காக தாய்த் தமிழகத்திலிருந்து தமிழர்கள் பல லட்சம் பேர் கப்பல் ஏற்றப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் அங்கே உள்ள சிங்கள அரசு மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமையும், வாக்குரிமையும்கூடத் தரவில்லை. மறுத்தது. கொத்தடிமைகளாகவே பார்த்தது. `இந்த மண்ணிலேயே நூற்றாண்டுகளாக வாழும் மலையகத் தமிழனுக்கு எல்லா உரிமைகளையும் கொடு’ என்று கேட்டுப் போராடினார் ஈழத் தந்தை செல்வா. பிரச்னையே அங்கிருந்துதான் தொடங்கியது. எதிர்ப்பவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

இன்றும்கூட அங்கே சுமார் நான்கு லட்சம் மலையகத் தமிழ் மக்கள், அதாவது தாய்த் தமிழகத்து வம்சாவழிகள் ஓட்டுரிமையும், குடியுரிமையும் இல்லாமல்தான் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். அதற்காக இங்கே `எதிர்ப்பு’ப் பேசும், தலைவர்கள் யாரும்வெட்கப்படவில்லை. 

வேதனைப்படவில்லை. இந்திய பிரஜைகளின் வம்சாவழித் தமிழர்களை சிங்கள அரசு இன்றைக்கும் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறதே என்று வெட்கப்பட வேண்டாமா? தேசப் பற்றாளர்களாக நடிக்கும் கதர்ச் சட்டைக்காரர்கள் சிலர் இதில் வெட்கப்படாமல் இருப்பது ஏன்? இந்த நியாயத்தைத்தான் நான் எடுத்துச் சொல்கிறேன். கேட்கிறேன்.”

வன்முறையாளர்களான புலிகளை ஆதரித்து நியாயம் பேசுவது சரியா என்பதுதானே சில காங்கிரஸாரின் குற்றச்சாட்டு?

“வன்முறை எது, விடுதலைப் போராட்டம் எது என்ற வித்தியாசம் தெரியாத தலைவர்களைப் பற்றி என்ன கூறுவது? கோழிக்குஞ்சு ஒன்றை பருந்து தன் இரைக்காக தூக்கிச் செல்வது வன்முறை வெறியாட்டம். தன் குஞ்சை மீட்க கோழி நடத்தும் எதிர்ப் போராட்டம் விடுதலைக்கான போராட்டம். அங்கே சிங்கள அரசு நடத்துவதுதான் வன்முறை வெறியாட்டம். ஈழ மக்கள் என்ற கோழிக்குஞ்சை மீட்க புலிகள் நடத்துவது விடுதலைக்கான போராட்டம். இதை நான் ஆதரிக்கின்றேன். `கைது செய்’ என்ற குரலுக்கு அஞ்சி என் நிலைப்பாட்டை என்றுமே மாற்றிக்கொள்ள மாட்டேன்.”

ஏதோ சிலர் அல்ல; உங்கள் கூட்டணியிலேயே உள்ள காங்கிரஸாரும், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. தலைமையும்தான் உங்களைக் கைது செய்யச் சொல்கிறார்கள்…

“தமிழக மக்களிடமே ஓட்டு வாங்கி, பதவியில் அமர்ந்துகொண்டு அந்த மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள். இனத்திற்கும், மொழிக்கும் துரோகியாக நிற்கிறார்கள். அவர்களின் நோக்கம் எல்லாம் தி.மு.க.வை நிர்ப்பந்திப்பது. நெருக்கடிக்குள் தள்ளுவது. அதற்கு திருமாவளவனைப் பயன்படுத்துகிறார்கள்.

என்னைக் கைது செய்ய வைப்பதன் மூலம் தி.மு.க.விற்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பிளவை ஏற்படுத்திவிட முடியும் என கனவு காண்கிறார்கள். அது ஒரு காலமும் நடக்காது.

இன்னொன்று… காங்கிரஸார் என்று கூறுகிறீர்கள். எந்த காங்கிரஸ் என்று கூறவேண்டும். இங்கே `அம்மா’ காங்கிரஸும் இருக்கிறது. அன்னை சோனியா தலைமையில் உள்ள காங்கிரஸார் ஏதும் கூறவில்லை. ராஜீவ் கொலையாளிகளையே `மறப்போம். மனிதநேயத்தைக் காப்போம்’ என்று பெருந்தன்மையோடு மன்னித்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கருத்துக் கூறியவர்தான் அன்னை சோனியா. அவரே அப்படி இருக்கும்போது, இங்குள்ள சிலர் காங்கிரஸ் என்ற போர்வையில் ராஜீவ் படுகொலையையே இன்னமும் கூறிக்கொண்டிருந்தால் என்ன பொருள்? `அம்மா’ காங்கிரஸுக்கான பணியைச் செய்கிறார்கள். அ.தி.மு.க.வின் அரசியல் காய் நகர்த்தலுக்கு ஆதரவாகவும், டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்றே பொருள்.

அடுத்து, அ.தி.மு.க. பற்றிக் கூறவேண்டும். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. என்பது ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும் ஆதரிப்பதாகவே இருந்தது. ஆனால் இப்போது இருப்பது `அம்மா’ அ.தி.மு.க. `அம்மா’வின் நிலைப்பாடு ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரானது. குறிப்பாக ஒரு தமிழனான பிரபாகரன் உலகம் போற்றும் மாவீரனாக எழுந்து நிற்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு ராஜீவ் படுகொலையை முன்னிறுத்தி புலிகளை எதிர்ப்பதாகச் சொல்கிறார். நான் கேட்கிறேன், அமரர் ராஜீவ் காந்தி என்ன அ.தி.மு.க.விற்குத் தலைவராகவா இருந்தார்? ராஜீவின் மனைவியும், புதல்வர்களுமே அதை மன்னித்த பிறகு `அம்மா’ ஏன் அதையே பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? சில காங்கிரஸாருக்கும், `அம்மா’விற்கும் சொல்வது இதுதான். ஓர் இனத்திற்கான விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்து தமிழினத்தின் துரோகிகளாக மாறிவிடாதீர்கள்!”

காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வும் கூட ஈழ மக்கள் பிரச்னையை ஆதரிக்கிறார்கள். அந்த வகையில் சிங்கள அரசை எதிர்க்கிறார்கள். விடுதலைப் புலிகளைத்தான் வன்முறை இயக்கம் என எதிர்க்கிறார்கள். புலிகள் மூலமான ஈழ விடுதலை சரியானதல்ல என்கிறார்களா?!

“அப்படிக் கூறுவது அவர்களின் `அரசியல் அறியாமை’ அல்லது மோசடி, ஏமாற்று நாடகம் என்றே கூறுவேன். அங்கே புலிகள் வேறு, ஈழ மக்கள் வேறு அல்ல. உலகில் எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமும் புலிகளைப்போன்று இத்தனை காலமும் தாக்குப்பிடித்து நின்றதில்லை. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு இருப்பதால்தான் இன்று வரையிலும் அவர்களால், பன்னாட்டு ஆயுதக்குவியலோடு போரிட்டு வரும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நிற்கமுடிகிறது. தனி ஈழம் என்பது விடுதலைப் புலிகளின் வயிற்றில் சுமக்கும் கரு. அதை அவர்கள்தான் பிரசவித்தாக வேண்டும். அவர்கள் மூலமே அந்த விடுதலை கிடைத்தாக வேண்டும்.

இவர்கள் இங்கே மக்களை ஏமாற்ற, `ஈழ மக்கள் பிரச்னையை ஆதரிக்கிறோம். புலிகளை எதிர்க்கிறோம்’ என்கிறார்கள். ஈழ விடுதலையை யார் வாங்கித் தருவார்கள்? அ.தி.மு.க.வும், `சில’ காங்கிரஸாருமா? அப்படிச் சொல்லட்டும். நாங்கள் அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறோம்.”

தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் `இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட்டு வற்புறுத்த வேண்டும்’ என்ற தீர்மானம் அப்படியே உள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறதே? கலைஞர் இதில் மெத்தனமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்படுகிறது. இதில் உங்கள் கருத்து என்ன?

“சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் எப்படிப்பட்டது என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் அவரது வேகம் என்பது வேறு. அரசு எந்திரமாகச் செயல்படுவது என்பது வேறு. கலைஞரின் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் இப்போது மத்திய அரசு அசைந்துள்ளது. `தாமதம்’ என்ற காரணத்தைக் கூறி `சொன்னபடி எம்.பி. பதவிகளை வாபஸ் வாங்கினால், காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு ஏற்படும். பிறகு யாரிடம் போய் `செய்யுங்கள்’ என்று கேட்க முடியும்? அதனால்தான் தாமதமாகக் காய் நகர்த்துகிறார் எனத் தெரிகிறது. அவர் நினைத்ததைச் செய்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.”

இலங்கைத் தமிழர்களுக்கான நிதிவசூல் என்பது `போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்வது, பின்னுக்குத் தள்ளுவது என்ற எதிர்ப்புக் குரலுக்கு என்ன சொல்கிறீர்கள்?

“ஆமாம். இது திட்டமிடப்பட்டே, உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த பெரிய கொந்தளிப்பு இப்போது கொஞ்சம் அடங்கி விட்டதாகவே படுகிறது. இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்கு அப்பாவி மக்கள் பலியாவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என்ற போர்க்குரல் மங்கி, இப்போது எங்கு பார்த்தாலும் `நிதி கொடுங்கள், நிதி கொடுங்கள்’ என்ற குரலே எதிரொலிக்கிறது. அங்கே போரை நிறுத்தாமல், நிதி வசூல் செய்தும் பயன் இல்லை. குண்டு மழைகளுக்கிடையேவா `போய்ச் சாப்பிடுங்கள், மருந்திட்டுக் கொள்ளுங்கள்’ என்று கொடுக்க முடியும்? ஆகவே முதலில் `போர் நிறுத்தம்’ என்பதுதான் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டியது. முதல்வரிடம் நாங்களும் அதை எடுத்துக் கூறி வருகிறோம்.”

இலங்கையிலிருந்து இங்கே தூதுவராக வந்து சென்ற பசில் ராஜபக்சே, `போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று என்னிடம் இந்திய பிரதமர் ஏதும் கூறவில்லை’ என்றே கூறியிருக்கிறார். ஆக உங்களின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை `மத்தியில்’ கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை என்பதுதானே பொருள்?

“அதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையிருக்கும் பட்சத்தில் மத்திய அரசு தமிழினத்திற்குத் துரோகம் இழைப்பதாகத்தான் அர்த்தம். தமிழக முதல்வர் தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்வார் என நம்புகிறோம். சிங்களவர்களுக்கு ஆயுதம் கொடுத்துஉதவுவதில் காட்டிய மத்திய அரசின் வேகம், போர் நிறுத்தத்திலும் இருக்க வேண்டும்.”

இலங்கை அரசுக்கு நாங்கள் ஆயுதம் ஏதும் கொடுக்கவில்லை என்கிறாரே மத்திய அமைச்சர்?

“ஆயுதம் கொடுத்தால்கூட பரவாயில்லை. ஏதோ அண்டை நாட்டிலுள்ளவர்களுக்கு உதவி மனப்பான்மையில் செய்கிறார்கள் எனலாம். ஆனால் மத்திய அரசு அதைவிட பல படிகள் மேலே சென்று உதவியிருக்கிறது. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்த்தால், இலங்கையின் முப்படைகளுக்கும் எந்தெந்த விதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரமும் இருக்கிறது. இன்றைக்கு அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது குண்டுவீசும் விமானங்களை ஓட்டுவதே இந்திய ராணுவம்தான் என்ற செய்தியும் இருக்கிறது. மிக நவீன வசதிகள் கொண்ட அந்தப் போர் விமானத்தை அவ்வளவு எளிதில் இயக்க முடியாது. அதிகப் பயிற்சிகள் தேவை. அப்படிப்பட்ட அனுபவம் இந்திய ராணுவத்திடம்தான் இருக்கிறது. இப்படி எல்லா வகையிலும் உதவியதோடு, நமது வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்களை சிங்களத்தவனுக்கு தூக்கி ஓசியில் கொடுத்துள்ளார்கள். ஒரு விதத்தில் பார்ப்பதென்றால் இது சிங்கள அரசு நடத்தும் போர் அல்ல. அவர்கள் மூலமாக இந்திய ராணுவம் நடத்தும் போர் என்றுதான் கூற வேண்டும்.”

`தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் திருமாவளவனை முதல்வர் கருணாநிதி கைது செய்யாததன் `நோக்கம்’ என்ன? அவரும் புலிகள் ஆதரவாளர் என்பதுதானே’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவது பற்றி?

“முதலில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையே நான் எதிர்க்கிறேன். மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்த பிறகு தடை செய்யட்டும் என்பதே எமது கோரிக்கை. அடுத்தது, நான் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த சமயத்தில் இலங்கைக்குச் சென்று வந்தேன். `வன்னி’ பகுதி எல்லாமும் பார்த்துவிட்டு அங்கிருந்து ராணுவப் பொறுப்பிலுள்ள யாழ் மாவட்டத்திற்குள் நுழையும் வரை பெண் புலிகள்தான் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்துவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு இலங்கை ராணுவம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. திரும்பி வந்தது முதல் எல்லாமும் `அம்மா’விற்குத் தெரியும். அப்போது `பொடா’ சட்டமும் இருந்தது. முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் எந்தக் காரணத்திற்காக என்னை அப்போது கைது செய்யாமல் விட்டு வைத்தாரோ, அதே காரணம்தான் இப்போது கலைஞருக்கும் இருக்கும்.”

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வழக்கில் சிக்கிய வன்னி அரசுவை உடன் வைத்துக் கொண்டே முதல்வரைச் சந்திக்கிறீர்கள் என்பதுதானே முக்கிய குற்றச்சாட்டு!

“வன்னி அரசு எமது கட்சியின் நிர்வாகி. அவரை உடன்வைத்துக் கொண்டிருக்காமல் வேறு யாரை வைத்துக் கொள்வது? மேலும் அவர் `ஆயுதம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டே ஆதாரமற்ற, அர்த்தமற்ற குற்றச்சாட்டு.  அவருக்குத் தெரிந்த மீனவர்களுக்கு படகு மோட்டார் இன்ஜின் தேவைப்பட, அதை தனக்குத் தெரிந்த வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். இயந்திரப் படகு மோட்டார் வந்தது. அவ்வளவுதான். வேறு எந்த ஆயுதத்தைக் காட்டினார்கள்? எதுவும் இல்லையே! பொதுவாகவே, இங்கிருந்து புலிகளுக்கு ஆயுதக் கடத்தல் என்பது சிரிப்பான ஒன்று. விடுதலைப்புலிகள் ஆயுத விஷயத்தில் எங்கேயோ இருக்கிறார்கள். சிங்களப் படைகளிடம் பிடித்த நவீன ஆயுதங்களே அவர்களிடம் நிறைய இருக்கிறது. நானோ, வன்னி அரசுவோ கடத்த வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.”

வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் கைது சரியானதென்று கருதுகிறீர்களா?

“என்னைப் பொறுத்தவரையில் அது தேவையற்ற கைது என்றே கருதுகிறேன். கைது செய்திருக்கக் கூடாது. புலிகள் இயக்கத்தை எதிர்த்துப் பேச என்ன கருத்துரிமை இருக்கிறதோ, அதே கருத்துரிமை ஆதரித்துப் பேசுபவர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் ஒன்றும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக இயக்கம்கூட்டி, ஆயுதம் சேகரித்து, அந்தத் தலைமைக்கு `தலைவர்’ என்று கூறிக் கொண்டவர்கள் அல்ல. அப்படியொரு சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வது ஒன்றும் பெரிய குற்றமில்லை.”

நன்றி குமுதம் ரிப்போட்டர்

நவம்பர் 5, 2008 at 10:35 பிப 6 பின்னூட்டங்கள்


வீரவணக்கம் தியாகிகளே

பார்வைகள்

  • 53,118 பார்வைகள்

RSS திருமா